ஐஸ்கிரீம் உடலுக்கு நல்லதா?



கோடைக்காலம் வரும்போது, உடலுக்கு குளிர் தேவைப்படுகிறது. மதியமோ, இரவோ சாப்பிட்டு முடித்ததும், கூடவே ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட பலருக்கு ஆசை. ஆனால், கோடைக் காலத்தில், ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

ஐஸ்கிரீம் சாப்பிடும்போது உடல் குளிச்சியடையும். அதே நேரத்தில், ஐஸ்கிரீமை ஒரு நல்ல உணவாக ஏற்றுக் கொள்ள முடியாது.
பால், பால் கிரீம் பவுடர், சர்க்கரை, எசன்ஸ் போன்றவை, ஐஸ்கிரீமின் மூலப் பொருட்கள். ஐஸ்கிரீம் தயாரிப்பில், பாலின் அளவு பாதிக்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், உற்பத்தியாளர்கள் அதை சரிவர கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஆஸ்துமா, சர்க்கரை நோய், ஹைப்பர் டென்ஷன் போன்ற நோய் உள்ளவர்களுக்கு, ஐஸ்கிரீமானது, கோளாறை அதிகப்படுத்தும். ஆஸ்துமா நோயாளிகள், ஐஸ்கிரீமை சிறிதளவு சாப்பிட்டாலும், அது, உடலில் ஏற்படுத்தும் வெப்ப அளவு மாறுபாடு, நோயாளிகளுக்கு மிகுந்த சிரமத்தை தரும்.

ஐஸ்கிரீமில் சேரும் சர்க்கரையின் அளவு, சர்க்கரை நோயாளிகளுக்கு தொல்லை தரும். தலைவலியை தொடர்ந்து அனுபவித்து வருபவர்களுக்கு, ஐஸ்கிரீம் மேலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தும். வயது முதிர்ந்தவர்கள், ஐஸ்கிரீமையும், அதைப் போன்ற உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டால், ஜீரணக் கோளாறுடன், வயிற்றுப் போக்கும் தோன்றக் கூடும். ஐஸ்கிரீம் தயாரிப்பதில், மூலப் பொருளாக உள்ள பால் மற்றும் கிரீம் பவுடர் ஆகியவற்றின் தயாரிப்பின் போது, கலக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் இருந்தால், ஐஸ்கிரீமில் பாக்டீரியா வளரும். ஐஸ்கிரீம் குளிர்ச்சியாக இருப்பதால், அதில் பாக்டீரியாக்கள் அதிக காலம் வசிக்கும். இதனால், ஐஸ்கிரீம் தயாரிப்பது மற்றும் பாதுகாப்பதில், சுத்தமாக இல்லாவிட்டால், அதைச் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் தோன்றும் சூழல் உருவாகும்.

இதைவிட, அதிக தொல்லை தரக்கூடியது, ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் நிறப் பொருட்கள் தான். நிறப்பொருட்களை சுவைக்காகவும், கவர்ச்சிக்காகவும், ஐஸ்கிரீம்களில் கலக்கப்படுகிறது. ஒவ்வொரு ஐஸ்கிரீம் நிறுவனமும், ஒவ்வொரு நிறப் பொருளை சேர்க்கிறது. அதனால், எந்த நிறுவன ஐஸ்கிரீம், உடலுக்கு ஏற்றுக் கொள்கிறதோ, அதையே சாப்பிடுங்கள்.

 ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடும் போது, பற்களுக்கு பாதிப்பு தோன்றும், வாய் சராசரியான குளிர்ச்சியை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திலே இருக்கும். ஐஸ்கிரீம் சாப்பிடும்போது, திடீர் குளிர்ச்சி, ஈறுகளை சுருக்குகிறது. பல்லின், "எனாமலை' போக்குகிறது. இந்த வகை மாற்றங்கள், மோசமான பல் நோய்களை விளைவிக்கும். ஐஸ்கிரீமில், "ரிபைன்ட் சுகர்' கலந்திருக்கிறது. இது பற்களுக்கு அதிக கேட்டை விளைவிக்கும். அது சுத்தப்படுத்தப்படாத பகுதிகளில் தங்கி, ஈறு வீக்கத்தை உருவாக்கும்.

ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் செயற்கை நிறப் பொருட்கள், வாயின் உள்பகுதியிலும், உதடுகளிலும், தேவையற்ற மாற்றங்களை தோற்று விக்கும். இதனால், மிக மெல்லிய சதைப் பகுதிகளில், பாதிப்பு ஏற்படும். எனவே, மிக குறைந்த அளவில் மட்டுமே ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்.
Powered by Blogger.